இருட்டடி


எங்கள் ஊரும் பிற ஊர்களைப் போலவே செழிப்பான தோட்டங்கள், தோப்புக்கள், பனங்கூடல்கள், வெட்டைகள், புல்வெளிகள் நிறைந்த  ஒரு சாதாரண கிராமம்.  எல்லா ஊர்ப் பிள்ளைகளையும் போலவே பள்ளிக்குடம், ரியூசன் என்று இளம் பிராயத்து சிறுவர்கள் முதல் வளர்ந்த மாணவர்கள் வரை நித்தமும் படிக்கவென்று ஓடுப்பட்டுத் திரிந்தாலும், கிடைக்கும் சொற்ப இடைவேளைகளில் விளையாட்டுக்களுக்கும் வேறு பொழுதுபோக்குகளுக்கும் எங்களால் நேரத்தை ஒதுக்கக் கூடியதாகத்தான் இருந்தது.

ஓவ்வொரு வயதுக் குழுவிலும் இருப்பவர்கள் காலநேரத்துக்கு ஏற்றபடி வேறுவேறு விளையாட்டுக்கள் விளையாடுவோம். கிட்டிப்புல், கிளித்தட்டு, சிரட்டைப்பந்து போன்ற கிராமத்துக்கேயுரிய பாரம்பரிய விளையாட்டுக்கள் முதல் கிரிக்கெற், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் போன்ற நகரத்து  நாகரீக விளையாட்டுக்களும் எங்கள் ஊரில் இருக்கும் வெட்டை வெளிகளில் விளையாடித் திரிவதுதான் எமது முக்கிய பொழுதுபோக்கு.

ஊரிலுள்ள பல வெட்டைகளை நாங்கள் பாவித்தாலும் பெரும் பனங்கூடல் ஒன்றுக்கு நடுவில் இருக்கும் 'குருவியன்' வெட்டைதான் நாங்கள் அதிகம் கிரிக்கெற், உதைபந்தாட்டம் விளையாடும் இடம்.  பெரும் பனங்கூடலுக்குள் இருக்கும் குருவியன் வெட்டையை அடைவதற்கு ஐந்தாறு ஒற்றையடிப்பாதைகள் ஒவ்வொரு மூலையிலிருந்தும், ஊர் மனைகளைப் பிரிக்கும் பிற ஒழுங்கைகளிலிருந்தும்,  பிரதான தெருக்கள் இரண்டைக் குறுக்கறுக்கும் கல்லுரோட்டில் இருந்தும் பிரிந்து பாம்புகள் பிணைந்து விலகுவதுபோல வளைந்தும் நெளிந்தும் செல்லும். இந்த ஒற்றையடிப்பாதைகளில் மிக வேகமாகவும், லாகவமாகவும், ஹாண்டில் பாரில் கையை வைக்காமலும் சைக்கிள் ஓடுவதும் எமது 'திரில்' பொழுதுபோக்குகளில் ஒன்று.

பள்ளிக்கூட நாட்களில்  பின்னேர ரியூசனுக்குப் போக முதல் கிடைக்கும் ஒரு மணித்தியாலத்தில் கூட உதைபந்தாட்டம் விளையாடி, வேர்க்க விறுவிறுக்க ரியூசன் வகுப்புக்களில் போய் குந்தி இருந்து படிப்பது எல்லோருக்கும் பழகிவிட்டது.

 ஆனாலும் வார இறுதி நாட்கள், பாடசாலை விடுமுறைக்காலம் என்றால் காலை பத்து மணிக்கெல்லாம் ஒன்றுகூடி 'கன்னை' பிரித்து கிரிக்கெற் விளையாடுவோம். கிரிக்கெற் முடிய வம்பளந்து இளைப்பாறுவோம்.  சிலவேளைகளில் கள்ள இளனி பிடுங்க அல்லது கள்ள மாங்காய் ஆய என்று ஊரிலுள்ள முள்ளுக்கம்பியாலும், அலம்பல் வேலிகளாலும் கட்டிக்காக்கப்படும் காணிகளுக்குள் போய்வருவோம். மாலை மங்கும் நேரத்தில் மீண்டும் உதைபந்தாட்டம் இருள் கவிந்து ஆளையாள் தெரியாதமட்டும் விளையாடித்தான் வீடு போய்ச்சேருவோம்.

குருவியன் வெட்டையில் வயதுக்கேற்றபடி மூன்று பிரிவுகளாகப் பிரிந்து விளையாடுவதுண்டு. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட தவ்வல்கள் ஒரு பிரிவிலும், பன்னிரண்டு வயது தொடங்கி O/L வரை அடுத்த பிரிவிலும், A/L படிப்பவர்கள் இன்னொரு பிரிவிலும் விளையாடுவது வழமை. நான் நடுப்பிரிவில் இருந்தேன். குறைந்த வயதுக்காரர்கள் எப்போதும் தங்களைவிட வயது கூடியவர்களுடன் விளையாட விரும்பினாலும்,  வயது கூடியவர்கள் விளையாட ஆட்கள் போதாமல் இருந்தால்தான் தங்களுடன் சேர்ப்பார்கள்.  மதியநேரத்தோடு பாடசாலை முடிவதால் இளம்பிராயத்து சிறுவர்கள் குருவியன் வெட்டையைச் சூழவுள்ள பனங்கூடலுக்குள் ஆமி-புலி போல ஒளித்துப் பிடித்து விளையாடுவதில்தான்  அதிகம் மினக்கெடுவார்கள்.

பல ஒற்றையடிப்பாதைகள் குருவியன் வெட்டையைக் குறுக்கறுத்துப் போவதால், அடிக்கடி சனங்களும் எமது வெட்டையை குறுக்குப்பாதையாகப் பாவிப்பதுண்டு. இதனால் சைக்கிள்களில் போகின்றவர்களாலும், பொடிநடையில் போகின்றவர்களாலும் எமது விளையாட்டுக்கள் தடைப்படுவதுண்டு.

இப்படிக் குருவியன் வெட்டைக் குறுக்குப்பாதையை தினந்தோறும் பாவிப்பவர்களில் "பெட்டைக் குயிலன்" என்று நாங்கள் பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடும் ஒரு நடுத்தர வயதுக்காரனும் ஒருவன். பெட்டைக் குயிலன் எப்போதும் ஒரு கருநீல நிறச் சாரமும், வெளிர்நீல நிறச் சேர்ட்டும் அணிந்திருப்பான். அவன் தினமும் காலையில் வடக்குப் பக்கத்திலுள்ள ஓர் ஊரிலிருந்து கட்டுவேலைக்காக தெற்குப் பக்கமும், மைம்மல் தாண்டிய பொழுதில் திரும்பவும் தனது ஊருக்கும் போய்வருவான். அவனது பெண்களைப் போன்ற இடுப்பை ஒடித்த ஒயிலான நெளிநடையும், கைகளை அபியம் பிடித்து ஆட்டியபடி குழைந்து பேசுவதும் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கும். பனங்கூடலுக்குள்ளால் போகும்போது இராகம் இழுத்தவாறு ஏதாவது பாட்டை கொஞ்சம் சத்தமாகவே பாடிக்கொண்டு போவான். நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தால், வெட்டைக்கு நடுவாகப் போகாமல் ஓரமாக விலத்தித்தான் போவான். இதனால் நாங்கள் அவனை அதிகம் பொருட்படுத்துவதில்லை. சிலவேளைகளில் எங்களுக்கு வேறு பொழுதுபோக்குகள் இல்லாவிட்டால் அவனை வம்புக்கிழுப்பதற்காக "பெட்டைக் குயிலன்" என்று உரத்துக் கூச்சலிட்டும், மண்ணாங்கட்டிகளால் எறிந்தும் அவனை ஓட ஓட விரட்டுவதுண்டு.

ஒரு சனிக்கிழமை காலை பதினொரு மணியளவில் கிரிக்கெற் விளையாடலாம் என்ற நினைப்போடு குருவியன் வெட்டைக்குப் போனபோது அங்கு கூட்டமாக நின்ற இளவயதுச் சிறுவர்கள்  மிகுந்த கோபத்துடனும் ஆத்திரத்துடனும் கத்திக்கொண்டு நின்றார்கள். அவர்களின் சஞ்சலமான உரையாடல் காதில் விழுந்தபோது ஏதோ விபரீதம் நடந்திருக்கவேண்டும் என்று உணர்ந்து என்ன நடந்தது என்று அதட்டிக் கேட்டேன்.

அழுவாரைப் போல சிவந்த முழிக் கண்களுடன் நின்ற குழவியன் - கட்டையாகவும் உருண்டையான தோற்றம் உள்ளதால் வைத்த பட்டப் பெயர் - தாங்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது, வழமையாக ஓரத்தால் போகும் பெட்டைக் குயிலன் வெட்டைக்கு நடுவாக தங்களைக் குழப்புகின்ற மாதிரி வந்ததால், அவனை "பெட்டைக் குயிலன்" என்று பட்டம் தெளித்துக் கூப்பிட்டு வெட்டைக்கு வெளிப்பக்கத்தால் போகும்படி ஊண்டிச் சொன்னோம் என்றான்.  அப்படிச் சொன்னது பிடிக்காமல் பெட்டைக் குயிலன் கோபம் கொண்டு அடிக்க ஓடி வந்தபோது எல்லோரும் பனங்கூடலுக்குள் தலைதெறிக்க ஓடியபோதும், குழவியனை பெட்டைக் குயிலன் பிடித்துவிட்டான்.  "பெட்டையன் எண்டு இனிக் கூப்பிடுவியளோடா பாப்பம்" என்று பிலத்துக் கத்தியவாறே பிடிபட்ட குழவியனின் அரைக்காற்சட்டையை முரட்டுத்தனமாக உருவி, தொடைகளை இறுக்கிக் கசக்கி குஞ்சாமணியைப் பிடிச்சுப் பிசுக்கிப் பினைஞ்சு போட்டானென்று சொன்னார்கள். அந்தக் கதையைச் சொல்லும்போதே குழவியன் பெருத்த அவமானமும் கூச்சமும்  அசூசையும் கலந்த  உணர்வுகளை முகத்தில் அப்பிகொண்டு தேம்பித் தேம்பி கண்ணீர் விட்டு அழத்தொடங்கிவிட்டான்.

நடந்த கதையைக் கேட்டபோதே உடம்பெல்லாம் அதிர்ந்து ஆடுமளவிற்கு ஆத்திரம் வேகமாக வந்தது. பெட்டைக் குயிலன் விடுபேயன் போல இவ்வளவு காலமும் திரிந்தவன், இப்ப ஆருமே நினைச்சுப் பார்க்காத இப்படி ஒரு கூடாத செயலை, அதுவும் எங்கள் வெட்டையில வைத்து செய்தது,  எங்கட ஊர் மானத்திற்கும் மதிப்புக்கும், பெருமைக்கும் விட்ட  பெரிய சவால் மாதிரி இருந்தது.  பெட்டைக் குயிலனுக்கு எங்கட ஊர்ப்பொடியளில கைவைக்கிற அளவுக்கு துணிவு வந்ததை சும்மா விட்டுவிடக்கூடாது.  சூட்டோட சூடாக அவனுக்கு அவன்ரை வாழ்க்கையில கேள்விப்பட்டிருக்காத ஒரு பாடம் படிப்பித்து, அவனை எங்கள் வெட்டைப் பக்கம் சீவியத்திற்கும் தலைவைக்காமல் பார்ப்பதுதான் அடுத்த வேலை என்று கறுவிக்கொண்டே மனதுக்குள் சபதம் போட்டேன்.

குழவியனை சமாதானப்படுத்துவதற்காக "பெட்டைக் குயிலன் எங்களை ஆரெண்டு தெரியாமல், எங்கட பரம்பரை கத்தி எடுத்தால் தரம் பறிக்காமல் விடுறதில்லை எண்டு தெரியாமல் உனக்கு நுள்ளிப் போட்டான்;  எங்களைத் தொட்ட அவனை இண்டைக்கே ரெண்டில ஒண்டு பாத்துவிட்டுத்தான் நித்திரைப்பாயிக்குப் போறது" என்று வீரவசனம் பேசினேன்.

பெட்டைக் குயிலன் வழமையாக ஏழு மணியளவில் இருட்டாக இருக்கும்போதுதான் திரும்பவும் பனங்கூடல் குறுக்குவழியில் தனது ஊருக்குப் போவது என்று தெரிந்திருந்ததால், உடனடியாகவே சரியான திட்டம் போட்டு நல்ல இருட்டடி கொடுத்து வாழ்க்கையில அவன் எங்கள மறக்கமுடியாத பாடம் கொடுப்பதுதான் சரி என்று எனக்குள் யோசித்தவாறே யார் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று சிந்தித்தேன். கனபேரைச் சேர்த்தால் திட்டம் பிசகிவிடும். என்றாலும் குறைந்தது ஒரு நாலுபேராவது இருந்தால்தான் வேகமான அதிரடித்தாக்குதலை செய்துமுடிக்கலாம் என்று தோன்றியது. பெட்டைக் குயிலன் ஏற்கனவே சின்னப்பொடியளோட தனகினபடியால் சிலநேரம் எங்களைப் போல பதினாலு-பதினைஞ்து வயதினரையும் கண்டு பயப்படாமல் இருக்கவும்கூடும். அதனால் எப்படியும் ஒரு பெரிய பொடியனையும் சேர்த்தால்தான் எங்களுக்கும் ஒரு பலமாக இருக்கும் என்று தீர்மானித்தேன்.

அநேகமான பெரிய பொடியங்கள் படிப்பிலும் அல்லது பெட்டை பாக்கிறதிலையும் மினக்கெடுவாங்கள் என்பதால் இதில் இரண்டிலும் அதிகம் ஈடுபாடு காட்டாத, நேர்மை, நியாயம், புரட்சி, தத்துவம் என்று எந்த நேரமும் பெரிய தடிமனான புத்தகங்களைப் படித்து, விளங்காத தமிழில் அகிலம், பிரபஞ்சம்  என்ற வாயோயாமல் தத்துவம் கதைக்கும் சொக்கியை கேட்டால் உடனடியாகச் சம்மதிப்பான் என்று நினைத்தேன்.

சொக்கிக்கு பதினேழு வயதுதான் என்றாலும் ஆள் வாதநாராயணி மரம் மாதிரி நல்ல வளர்த்தி. மெலிஞ்ச தேகம்.  முள்ளுப் பண்டி மாதிரி தலையும் தாடி, மீசையும் வளர்ந்திருக்கும். அவன் உலக சோசலிச இயக்கத்தினது நான்காம் அகிலத்தின் லியோன் ட்ரொட்ஸ்கியின் தீவிர பக்தனாக இருந்தபடியால் அவனுக்கு ட்ரொட்ஸ்கி என்று பட்டப்பெயர் வைத்தோம். அது எங்கள்  பல்லுக்கையே கொழுவிக்கொண்டு நிண்டு, வாய்க்குள்ள பூராததால் சொக்கி என்று மருவி விட்டது. அடிதடியில பெரிதாக ஈடுபாடு காட்டாவிட்டாலும், சமூக சிந்தனை கூடினவன். பெட்டைக் குயிலனுக்கு இருட்டடி போட அவன் போதுமென்று நினைத்தேன்.

அடுத்ததாக பெட்டைக் குயிலனை திகைக்க வைக்கக் கூடியமாதிரி அதிவேகமாக இயங்கி, இடக்கு முடக்கான இடத்தில மோட்டு அடிபோடக்கூடியவனும், அதிகம் விளக்கம் கேளாமல் சொன்னதைச் செய்யத் தோதாய் இருக்கக் கூடியவனுமான உசார் மடையன் கட்டையனைத் தேர்ந்தெடுத்தேன். கட்டையன் கருங்காலி நிறமும் வலிமையுமானவன். எங்களுடன் எப்பவும் கூடித் திரிய விரும்புகிறவன். என்னைவிட ஒரு வயதுதான் மூத்தவன். இருந்துவிட்டு எப்போதாவது ஞாபகம் வந்தால் மாத்திரமே பள்ளிக்கூடப் பக்கம் எட்டிப் பார்ப்பான். அநேகமான நேரம் தோட்டம், துரவு என்று உழுவான் மாதிரி உழுதுகொண்டு திரிவதும், விளையாடுவதும்தான் அவனது தினப்படி உத்தியோகம்.

மூன்றாவதாகப் பனங்கூடலுக்குக் கிட்டடியில் உள்ள புக்கையரை பிடிக்கலாம் என்று தோன்றியது. புக்கையருக்கு என்னைவிட ஒருவயது குறைவு என்றாலும் நல்ல தோற்றம். விளையாடும்போது அடிக்கடி அளாப்பல் வேலைகள் செய்து சண்டையில் ஈடுபடுபவன் என்பதால் பிரயோசனப்படுவான் என்று நினைத்தேன். புக்கையரின் தகப்பனார் 'அன்' விகுதியில் பேர் வந்தால் 'அவன்/இவன்' என்று மற்றவர்கள் சொல்லக்கூடும் என்பதால் கவனமாகப் பிள்ளைக்கு பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்தவர். செல்லப் பெயரிலும் 'அன்' விகுதி வரக்கூடாது என்று தானே நல்ல மரியாதையான வீட்டுப் பெயரையும் வைத்திருந்தார். நாங்களும் புக்கையரின் தகப்பனாருக்கு மதிப்புக்கொடுக்கவேண்டும் என்பதற்காக பட்டப்பெயரிலும் 'அன்' வராமல் பார்த்து வைத்த பெயர்தான் புக்கையர்.  அளாப்பிக் குழப்பும்போதுகூட கோபம் வந்தால் நாங்கள் "டேய் புக்கை" என்றுதான் கூப்பிடுவோம்.

உடனடியாகவே  தெரிவுசெய்த ஓவ்வொருவரினதும் வீடுகளுக்கும் போய் அவர்களைத் தனித்தனியே ரகசியமாக அழைத்து வெட்டையில் நடந்த விடயத்தை சுருக்கமாகச் சொல்லி, பெட்டைக் குயிலனுக்கு இருட்டடி கொடுப்பதற்கு விடாப்பிடியாகச் சம்மதம் வாங்கிவிட்டேன். சொக்கி பல குறுக்குக்கேள்விகள் கேட்டாலும் நடந்தது  மிகவும் பாரதூரமான விடயம் என்பதை உணர்ந்ததும் ஒரு சமூகக் குற்றத்தை ஒழிக்கவேண்டும், ஒரு மோசமான சமூகவிரோதியைத் தண்டிக்கவேண்டும் என்பதற்காக என்னைவிட ஆவேசமாக இருட்டடி கொடுப்பதுதான் சரி என்ற முனைப்பில் நின்றான். அவன் படிக்கும் தடிமனான புத்தகங்களில் இப்படியான விடயங்களை எப்படிக் கையாளாலாம்  என்று அகிலக்காரர்களின் மத்திய குழுவினர் முன்னரே தீர்மானம் போட்டிருந்தார்களா என்று கேட்க நினைத்தாலும் அது அன்றையநாளின் முக்கிய நோக்கத்தை திசை திருப்பிவிடும் என்பதால் விட்டுவிட்டேன்.

இருட்டடித் தாக்குதல் பற்றிய விரிவான  விளக்கத்திற்கு மூவரையும் பிற்பகல் மூன்று மணியளவில் குருவியன் வெட்டைக்கு   வரச்சொல்லிவிட்டு, மத்தியானச் சாப்பாட்டுக்கு அம்மா தேடத் தொடங்க முதலே வீட்டுக்குப் போனேன். சாப்பிடும்போதே ஏதோ பெரிய காரியம் ஒன்றைச் சாதிக்கப்போவதாக மனம் மிகவும் சந்தோஷப்பட்டது. மயிர்க்கூச்செறியும் மின்னல்வேகத் தாக்குதலை சிறு பிசகும் இல்லாமல் காரியமாற்ற ஒழுங்கான திட்டம் தேவை என்பதால் நண்பர்களைச் சந்திக்கும் தருணம் மட்டும் பொறுமைகாக்க முடியவில்லை. முற்றத்திற்குப் போவதும், வீட்டுக்குள் வருவதுமாக மனதுக்குள் பல கோணங்களில் இருட்டடித் தாக்குதலை ஒத்திகை பார்த்தேன். எதுவும் திருப்தியானதாக இருக்கவில்லை. ஆனால் நல்லா செவிள் பறக்க சப்பல் அடி கொடுக்கவேண்டும் என்ற உந்துதல் கூடிக்கொண்டுவந்தது.

முன்னைய வீரதீரச் செயல்களை நினைவுபடுத்த முயன்றேன். பெரிதாகத் தன்னும் சொல்லிக்கொள்ளுமளவில் ஒன்றும் இருக்கவில்லை. வீட்டில் எந்நேரமும் அண்ணன், தம்பியோடு அடிபாடுகள் இருந்தாலும், வெளியில் நல்லபிள்ளையாகவே அநேகமாக இருந்திருக்கின்றேன்.  விளையாடும்போது இடையிடையே எதிர்க் 'கன்னை'யாருடனும் விளையாட்டு ருசியில் சில்லறைச் சண்டைகள் பிடித்திருந்தாலும், அவை ஒருநாளும் மோசமான சண்டைகளாக மாறியதில்லை.

இரண்டாம் வகுப்புப் படிக்கும்போது பருப்பனுடன் அங்கிரி போட்டதால் வகுப்பில் நாங்கள் இரு கோஸ்டிகளாக இருந்தோம். ஒரு கோஸ்டிக்கு நானும், மற்றக் கோஸ்டிக்கு பருப்பனும் தலைவர்கள். வகுப்பிலும் மைதானத்திலும் வாய்த் தர்க்கங்களிலும், பட்டம் தெளித்தலிலும்தான் எங்கள் கோஸ்டிகள் முறுகுப்பட்டுத் திரிந்தன. ஆளுக்காள் கை வைத்தால் தலைமை வாத்தி செகிடு கிழிய அறைந்துவிடுவார் என்ற பயத்தில் முட்டுப்பட்டதில்லை.

எங்கள் கோஸ்டிகளின் முறுகல் முற்றிய நேரத்தில்தான் ஊர்த்திருவிழா வந்தது. சப்பறத் திருவிழா இரவில் கோயில் பின்வீதியில்  சப்பறம் போனதன் பிற்பாடு போட்டுப் பிடிப்பதென்று பருப்பனும் நானும் சம்மதித்திருந்தோம். பருப்பன் என்னைவிடப் பலசாலி மாதிரி எனக்குத்தோன்றியது. அதனால் அவன் எதிர்பார்க்காதமாதிரி ஏதாவது செய்யவேண்டும் என்று யோசித்தபோது, அப்போதுதான் வீட்டில் 'வயறிங்' வேலை செய்து மிஞ்சியிருந்த வயர் துண்டுகளில் இரண்டைச் சுத்திக் காற்சட்டைப் பொக்கற்றுக்குள் திணித்துக்கொண்டு கோயிலடிக்குப் போனேன்.

சப்பறத்திற்குப் பின்னால் பொருமிப் புடைத்த காற்சட்டைப் பொக்கற்றுகளுடன் போய்க்கொண்டிருந்தபோது பருப்பனும் அவன் கோஸ்டியினரும் சில அடிகள் பின்னாலேயே வந்துகொண்டிருந்தனர். சப்பறம் மேற்கு வீதியிலிருந்து வடக்கு வீதிக்குத் திரும்ப நாங்கள் இருதரப்பினரும் பின்தங்கிவிட்டோம்.  போட்டுப் பிடிப்பதில் முந்துபவன்தான் வெல்வான் என்பதால் பருப்பன் எதிர்பாராத வேளையில் பொக்கற்றுக்குளிருந்த வயரை சடாரென்று எடுத்துச் சுழற்றியபோது, திடீரென எங்கிருந்தோ வந்த பெரிய பொடியன் ஒருவன் எங்கள் இருவரையும் காதில பிடித்து "சின்ன முளையான்களாக இருக்கிற நீங்கள் கோயில் திருவிழாவில் சண்டைபிடிக்கப் போறியளோ?" என்று கேட்டு புறங்கையால் பளீரென கன்னத்தில் இருவருக்கும் மாறி மாறி அறைந்தான். வயர் வைத்திருந்த காரணத்தால் எனக்குப் பல அடிகள் விழுந்து கன்னம் விண்விண் என்று வலித்தது.  பருப்பனும் நானும் "ஐயோ அம்மா" என்று அலறிக் கத்தியவாறே எங்களை விட்டுவிடுமாறு மன்றாடினோம். "இனி எங்கையாவது சண்டை பிடிக்கிறது கண்டனெண்டால் அந்த இடத்தில கை காலை ஒடிச்சு கரண்ட் கம்பியில தோரணம் கட்டிவிடுவன் " என்று வெருட்டி எங்களை ஓடித்தப்புமாறு சொன்னதும், நாங்கள் குதிகால் குண்டியில்பட கன்னத்தைப் பிடித்தவாறே ஓடி வீட்டுக்குப் போனதும் இப்பத்தான் நடந்தமாதிரி இன்னமும் உணர்வில் உள்ளது.

மூன்று மணிக்கு முந்தியே சைக்கிளை எடுத்துக்கொண்டு குருவியன் வெட்டைக்கு வேகமாகப் பறந்தேன். சொல்லி வைத்த மாதிரி நண்பர்கள் மூவரும் வந்து சேர்ந்திருந்தார்கள். வெட்டையின் ஒரத்தில் பனைமர நிழலின் கீழ் வழமையாக இருந்து கதைக்கும் பனங்குத்தியில் குந்தியவாறே  இருட்டடி கொடுக்கும் திட்டத்தை விபரிக்கத் தொடங்கினேன்.  பின்னேரம் விளையாட்டு முடிந்தபின்னர், வீட்டுக்குப் போவது மாதிரிப் போய் இருள் கூடியதும் திரும்பவும் குருவியன் வெட்டையில் சந்திக்கவேண்டும் என்றேன். கல்லுரோட்டில் இருந்து பனங்கூடலுக்குள்ளால் பிரியும் ஒற்றையடிப்பாதை வெட்டைக்கு வர சுமார் நூறு யாருக்கு முன்னால் வில்லு மாதிரி வளையும் இடம்தான் தோதான இடம் என்று அந்த இடத்தை நோக்கிக் கையைக் காட்டிச் சொன்னேன். அந்த வளைவான பாதைக்கு கிட்டவாக பல பனைமரங்கள் நெருங்கி நிற்பதால், கரிய இருளில் பனைமரத்தோடு இருட்டாக இருட்டாக நின்று தாக்குதலைச் செய்யலாம் என்று சொன்னதை மற்றவர்களும் ஆமோதித்தார்கள். கட்டையன் தன்னிடம் இருக்கின்ற மம்பட்டிப் பிடிக் கொட்டனைக் கொண்டுவரவா என்று கேட்டபோது, கொட்டன், பொல்லுகளால் அடித்தால் பெட்டைக் குயிலன் சிலநேரம் பொட்டென்று போனாலும் போய்விடுவான் என்ற பயத்தில் வேண்டாம் என்று சொன்னேன். நாங்கள் நாலு ஆம்பிளையள் அவனைக் கையாலையும் காலாலையும் உழக்கினாலே சவிள் அடி சம்பல் இடியாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் பெட்டைக் குயிலன் விட்ட சேட்டைக்கு அவனுக்கு நல்ல பூசை கொடுக்கவேண்டும் என்பதால், கட்டையனை பெட்டைக் குயிலனின் கவிட்டைக் குறி தப்பாமல் நாலு எத்து எத்தி அடிபட்ட ட்றக் மாதிரிச் சப்பிளிக்கிறதுதான் முக்கியம் என்று சொன்னேன்.   பெட்டைக் குயிலனுக்கு தான் கொழுப்பு முத்திச் செய்த வேலையாலதான் அடிவிழுகுது என்று தெரிந்தாலும் ஆர் அடிக்கிறது என்று தெரியக்கூடாது. எங்களில ஒருத்தனையும் அவன் மட்டுக்கட்டக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கவேண்டும். அதாலை அடிபோடும்போது ஒரு சொல்லுத்தன்னும் கதைக்காமல் நாங்கள் உசாராக இருக்கவேண்டும் என்று சொன்னேன்.

அரை மணித்தியாலமாக பல்வேறு உத்திகளையும் அலசிய பின்னர் திட்டத்தை இவ்வாறாகச் செய்யலாம் என்று நாலுபேரும் உடன்பட்டோம்.  கல்லுரோட்டுப் பக்கத்தால் வரும் பாதை வளைவதற்கு முன்னால் சொக்கியும், புக்கையரும் பாதையின் இருபக்கமும் உள்ள பனை மரங்களின் பின்னால் சத்தம் சலாரில்லாமல் ஒளித்திருக்கவேண்டும். வளைவில் இருந்து வெட்டைப் பக்கமாக வரும் பாதையின் இரு பக்கத்தில் கட்டையனும் நானும் பனைகளுக்கு பின்னால்  பதுங்கியிருக்கவேண்டும். பெட்டைக் குயிலன் வளைவில் வர அவனுக்கு பின் பக்கமாக நிற்கும் புக்கையர் முதலில் ஓடிவந்து பெட்டைக் குயிலனின் கும்பத்தில் பாய்ந்து அவனை நிலத்தில் தடாலடியாக விழுத்தவேண்டும்.  பெட்டைக் குயிலன் நிலைகுலைந்த கணத்தில் சொக்கி ஓடிவந்து அவனின் கைகளைப் பின்பக்கமாக வளைத்து இறுக்கி பூட்டுப்போட்டு, அவனைத் திமிறாமல் பார்க்கவேண்டும்.  நிலத்தில பெட்டைக் குயிலன் விழுந்து கிடக்கிற நேரத்தில கட்டையன் ஓடிவந்து பெட்டைக் குயிலனின் கவிட்டைக் காலால் பதம் பார்க்கவேண்டும். நான் பெட்டைக் குயிலனின் நெஞ்சிலையும் முகத்திலையும் ஓங்கிக் குத்தி அவனின் சொண்டை உடைத்து, பல்லை நொருக்கி, சொத்தையையும் வீங்கச் செய்யவேண்டும். இதெல்லாம் இரண்டு நிமிடங்களுக்குள் முடிக்கவேண்டும். அதிரடியான இருட்டடியை முடித்துக்கொண்டு, வேறு ஆட்கள் வரமுன்னர் நாங்கள் நாலுபேரும் பிரிந்து ஓடி முங்கியன் தோட்டத்து தண்ணித்தொட்டியடியில சந்திக்கவேண்டும். சிக்கல்கள், குழறுபடிகள் எதுவும் வராத மிகவும் தெளிவான திட்டத்தை போட்டதில் மனதில் பெருமிதம் குடிகொண்டது.

நேரம் நிறைய இருந்ததால் தாக்குதல் ஒத்திகை பார்க்க முங்கியன் தோட்டத்திற்கு கல்லுரோட்டில் ஏறி, கிழக்குப் பக்கமாகத் திரும்பும் எருக்கலை, பாவட்டை, ஆமணக்குகளால் நிறைந்த பத்தைகளைக் கூறுபோடும் ஒற்றையடிப் பாதையூடாகப் போனோம்.  முங்கியன் தோட்டம் குத்தினால் ஏற்பேத்தும் கறள்பிடித்த முள்ளுக்கம்பிகளாலும், பட்ட இடத்தைக் குத்திக் கிழிக்கும் முள்ளுகளைக் கொண்ட கிளுவைகளாலும், மூரி மட்டைகளால்  அடைக்கப்பட்ட வேலியாலும் திறமாக அறுக்கை செய்யப்பட்ட பெரியதோட்டமாக இருந்தாலும், நாங்கள் களவாகப் போய்ப் புழங்க இடையிடையே பொட்டுக்களை பிரிச்சு வைத்திருந்தோம்.  பிரிச்ச பொட்டு ஒன்றுக்குள்ளால் உள்ளே புகுந்து, தோட்டவேலியோடு  பத்தையாக வளர்ந்திருந்த நாயுருவி, கூப்பிட்டுகுத்தி, காவிளாய்ச் செடிகளை விலத்தி பெரிய வாய்க்கால் பாதையூடாக தண்ணித்தொட்டியடிக்குப் போனோம்.

முங்கியன் தோட்டத்தில் அழுக்கணவன் பூச்சிகள் பிடிச்சு கீழ்ப்பக்கமாக இலை சுருட்டிக் கிடந்த மிளகாய்க் கண்டுகளுக்கு கள்ளுமுட்டித் தலையோடு காவல் செய்யும் வெருளியைக் கண்டதும், அதை பெட்டைக் குயிலனாகப் பாவித்து அடிபோடுகின்ற ஒத்திகையைச் செய்யலாம் என்ற யோசனை வந்தது.  வெருளிக்கு முதுகு கிடையாததால் வாய்க்கால் மணலில் நான் நிற்க புக்கையர் எனக்குப் பின்பக்கமாக ஓடிவந்து என்னைக் கீழே விழுத்துவது முதலாவது ஒத்திகையாக இருந்தது. நான் கீழே விழாமல் இருக்க அகட்டிய கால்களை இறுக்கமாக நிலத்தில் ஊண்டியபடி நின்றேன். புக்கையர் வேகமாக ஓடிவந்து ஒரு பண்டிக்குட்டி மாதிரி எனது முதுகில் ஏறியபோது, அவனது பாரம் தாங்கமுடியாமல் முகம் குப்புற வாய்க்கால் மணலில் விழுந்தேன். வாயெல்லாம் வாய்க்கால் மண் போய்விட்டது. ஏதோ பழைய கறளை வைத்து புக்கையர் என்னை வேண்டுமென்றே விழுத்திவிட்டான் என்று சரியான கோபம் வந்தாலும், ஒத்திகை ஒழுங்காக இருந்ததால் பொறுத்துக்கொண்டேன்.

அடுத்ததாக கட்டையனை கவிட்டைப் பொத்தி அடிக்க தயாராகச் சொன்னேன். அவனும் அதிவேகமாக எனது இடுப்புப் பிரதேசத்தை நோக்கிக் காலை வளைத்து சுழற்றமுனைந்தான். அவனைச் சரமாரியாக வாய்க்குவந்தபடி தூஷணத்தால் அர்ச்சித்து திட்டியபடி வெருளியின் கவிட்டுக்கு உதைக்கச் சொன்னேன். கட்டையன் வலுவேகமாக ஓடிப்போய் வெருளிக்கு ஒரு உதைவிட்டான். அந்த உதையில் வெருளியின் தலையாக இருந்து கள்ளுமுட்டி நிலத்தில் விழுந்து சிதிலமாக உடைந்து சிதறியது.  விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் கதை சொல்லிய பின்னர் கேட்கின்ற கேள்விக்கு விக்கிரமாதித்தன் விடை தெரிந்தும் சொல்லாமல்  மெளனம் சாதித்தால் அவன் தலையும் வெருளியின் முட்டித்தலை மாதிரி சுக்குநூறாக இப்படித்தான் வெடித்திருக்கும் என்று பட்டது.

கைகளை முறுக்கிப் பூட்டுப் போடுவது தனக்கு வடிவாகச் செய்யத் தெரியும் என்றும், தான் வீட்டில் தமையன்மாரை அடிக்கடி பூட்டுப்போட்டு மடக்கிறானென்று சொக்கி சொன்னதால் பூட்டுப்போடும் ஒத்திகை தேவையில்லை என்று விட்டுவிட்டோம்.  நானும் என் பங்குக்கு எனக்கு இடக்கைக் பழக்கம் என்பதால், என்ரை கை ஓங்குவதை எதிராளி பார்க்கமுன்னரே கன்னத்திலும், தோள்மூட்டிலும் உரமான குத்துவிட்டு கொழுக்கட்டை மாதிரி வீங்கச் செய்யமுடியும் என்று சொன்னேன். ஏற்கனவே முன்னர் ஒருக்கால் த்றீ, நோட், ஃபோர் காட்ஸ் விளையாடும்போது அளாப்பியதால் புக்கையருக்குக் குடுத்த குடுவையை ஞாபகப்படுத்த, புக்கையரும் நான் கள்ள இடிகள் நல்லாப் போடுவதில் மன்னன் என்று ஒத்துக்கொண்டான்.

நாலு பேரும் சேர்ந்து பெட்டைக் குயிலனுக்கு கும்முற கும்மலில அவன் பிழியப்பட்ட சக்கையாகத்தான் போகிறான் என்ற திருப்தி எல்லோர் முகத்திலும் இழையோடியது.

ஒத்திகை வேகமாக முடிந்ததால் திரும்பவும் குருவியன் வெட்டைக்குப் போய் உதைபந்து விளையாடிவிட்டு வெய்யில் தாண்டு இருட்டுப்படும் கருக்கல் நேரத்தில் எல்லோரும் கலைந்து வீட்டுக்குப் போனோம்.  அம்மா மேச்சலுக்குப் போட்டு வந்த பசுமாட்டில் பாலைக் கறந்து காய்ச்சி ஈயப்பேணியில் விட்டு ஆத்தியபடி இருந்தா.  உலகத்தில என்னதான் நடந்தாலும், ஆறு மணிக்கு அம்மா பால் காய்ச்சுவதும், அதை நானும் அண்ணன், தம்பியும் குடிப்பதும் நடந்துதான் ஆகவேண்டும். தப்பித் தவறி பிந்திப் போனால் அம்மாவின் ஏச்சுப் பேச்சுக்குத் தப்பமுடியாது. எனவே, நல்ல பிள்ளைமாதிரி மேலைக் காலைக் கழுவி, ஆத்தி மிதமான சூட்டிலிருக்கும் பாலை மடக் மடக்கென்று குடித்துவிட்டு, காற்சட்டைக்கு மேல் சாரத்தையும் கட்டிகொண்டு சேர்ட்டும் இல்லாமல் பட்டிக்கு வந்த ஆடு மாதிரி பவ்வியமாக இருந்தேன்.  அம்மா இரவுச்சாப்பாடு செய்வதற்கு தட்டுமூடல், நீத்துப் பெட்டிகளை தேடுவதில் பிராக்காக இருந்தநேரம்,  டக்கென்று சைக்கிளை எடுத்து வேகமாக உருட்டிக் கேற்றைத் தாண்டியதும் பாய்ந்தேறி பெடலை உழக்கிக் கொண்டு குருவியன் வெட்டைக்குப் பறந்தேன். தப்பித் தவறிச் சுணங்கிப் போனால் மற்றவர்கள் திட்டத்தை மாற்றிக் குழப்பக்கூடும் என்பதால் முதலில் நானே போகவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

குருவியன் வெட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் இலந்தை மரத்தோடு அண்டிய அன்னமுன்னா, அணிஞ்சில் பத்தைக்குள் சைக்கிளை வெளியே தெரியாமல் மறைத்துவிட்டு மற்றவர்களுக்காக காத்திருந்தேன்.  மூவரும் ஒருவர் பின் ஒருவராக நேரம் சுணங்கமுன்னரே வந்து சேர்ந்தனர். புக்கையரும் சொக்கியும் இருட்டில் தெரியாத நிறத்தில் உடுப்புக்களைப் போட்டுத் தயாராக வந்திருந்தார்கள். ஆனால் கட்டையன் வழமையான வெள்ளைச் சேர்ட்டுடன் வந்திருந்தான். இருட்டில வெள்ளைச் சேர்ட் வெளிச்சமாகத் தெரியும் என்று யோசிக்காமல் மொக்கன் மாதிரி வந்திருக்கின்றான் என்று உள்ளே கோபப்பட்டாலும், கன கச்சிதமாக திட்டம் போடாதது என்ரை கவனக்குறைவு என்பதால் அவனை சேர்ட்டைக் கழற்றச் சொன்னேன். கட்டையன் சேர்ட்டைக் கழற்றி சாரத்துக்குள் வைத்து சாரத்தை மடித்துக்கட்டி மந்திபோல இளித்தான்.  ஏற்கனவே போட்ட திட்டத்தை மீண்டும் ஒருமுறை சுருக்கமாகச் சரிபார்த்துக்கொண்டோம்.  ஒவ்வொருவரும் என்ன செய்யவேண்டும் எப்ப செய்யவேண்டும் என்பதில் ஒரு குழப்பமும் இருக்கவில்லை.

 நன்றாக இருட்டுப்பட்டாலும் முன்னிலவுக் காலமாக இருந்ததால் நிலவு வெளிச்சத்தில் குருவியன் வெட்டை  குளித்துக்கொண்டிருந்தது.  நிலவொளியில் வெட்டையில் நிற்பது அதனூடாகப் போய் வருபவர்களுக்கு எங்களைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் நாங்கள் முன்னரே தீர்மானித்த பனங்கூடல் ஒற்றையடிப் பாதையின் வளைவுக்கு வேகமாக ஒருவருடன் ஒருவர் ஒன்றும் பேசாது நடந்தோம்.  எமது குதிகால்கள் நிலத்தில் படும் ஓசையும், நெஞ்சு படபடக்கும் ஓசையும் மட்டுமே கேட்டன.  யாரோ எங்களுக்குப் பின்னால் தொடர்ந்து வருவது போன்ற உணர்வு வர அடிக்கடி சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டோம்.  ஆனால் அப்படி ஒருவரும் எங்களைத் தொடரவில்லை. அடிபாட்டுக்குப் போகும்போது எல்லாப் புலன்களும் கூர்மையாக ஏற்படும் பதட்டத்தால் வரும் மனப்பிரமை என்று நினைத்தேன். மூச்சை சீராக உள்ளிழுத்து பதட்டத்தைத் தணிக்கமுயன்றேன்.

 பனை மரங்கள் செறிவாக இருந்தமையாலும் பல பனைகள் கள்ளுவடிக்கத் தேர்ந்தவையாக இருந்ததாலும் பனங்கூடலுக்குள் நிலவொளி இருக்கவில்லை. புக்கையரும் சொக்கியும் வளைவைத் தாண்டி பனை மரங்களுக்குப் பின்னால் நிலையெடுத்துக்கொண்டார்கள். கட்டையன் எனக்கு எதிர்ப்புறமாக ஒரு பனைக்குப் பின்னால் பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டான்.  நான் நின்ற பக்கத்தில் பாதை வளைவுக்கு பக்கத்தில் ஒரு பனம்பாத்தி போட்டிருந்தார்கள்.  அதனைச் சுத்தி நிறையக் காவோலைகள் கருக்குமட்டைகளோடு இருந்தன.  கொக்காரை, பன்னாடைகளையும் கூட பனம்பாத்தியின் மேல்பக்கம் அடுக்கிவைத்திருந்தார்கள். கால்களுக்கிடையில் உமல்கொட்டைகள் இடறினாலும் பதுங்கி இருக்க வசதியாக இருந்ததால் பனம்பாத்தியோடு நான் ஒதுங்கினேன்.

 இருண்டுவிட்டதால் பின்னேரக் கள்ளுக்குப் போய்விட்டு ஆடி ஆடிப் போய்க்கொண்டிருந்த ஒன்றிரண்டு சைக்கிள்களைத் தவிர பனங்கூடல் மயான அமைதியாக இருந்தது.  ஊரடங்கிவிட்டதால் கல்லுரோடும் வெறிச்சோடித்தான் இருந்தது.  நாங்கள் எதிர்பார்த்தபடியே கொஞ்ச நேரத்தில் வாய்க்குள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு பெட்டைக் குயிலன் கல்லுரோட்டிலிருந்து பிரியும் ஒற்றையடிப் பாதையில் பனங்கூடலுக்குள் இறங்குவது  நிலவு வெளிச்சத்தில் அவனது நெளிந்த நடையில் தெரிந்தது.  அடுத்த கணமே அவனை அடிச்சுத் துவைக்கவேண்டும் என்ற திகில் நிறைந்த ஆவல் உடலெல்லாம் பெருகி, கைகளும், கால்களும் தினவெடுத்தன.  படபடவென இடிக்கும் இதயத்தோடு அவன் பாதை வளையும் இடத்திற்கு வரும்வரை தயாராகக் காத்திருந்தேன். ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகங்களாகத் மாறி, இதயத் துடிப்பின் வேகத்தை அதிகரித்தன.  இந்த அனுபவம் இதுவரை உணர்ந்திருந்தாத புதிய அனுபவமாக இருந்தது.

 பெட்டைக் குயிலன் பாதை வளையும் இடத்திற்கு  சரியாக வந்தபோது அவிட்டுவிட்ட நாம்பன் போல தடதடவென்று வேகமாக ஓடிவந்த புக்கையர் பெட்டைக்குயிலன் முதுகு மீது முழுப் பலத்தோடு பாய்ந்து விழுந்தான்.  பாதையின் வளைவில் பெட்டைக் குயிலனுக்கு மேல் புக்கையர் புளிச் சாக்குமூட்டை மாதிரிக் கிடந்தது தெரிந்தது.  உடனடியாகவே சொக்கி மற்றப் பக்கத்தாலும், நானும், கட்டையனும் எங்கள் பக்கத்தாலும் அவர்கள் கிடந்த இடத்தை நோக்கி மின்னல் வேகத்தில் ஓடினோம்.  எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த பெட்டைக் குயிலன் ஒருகணம் ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு வெலவெலத்துப் போனாலும், அடுத்த கணமே கலவரத்துடன் பெருங்குரலில் குரவெடுத்து " ஐயோ, ஐயோ அடிக்கிறாங்கள், காப்பாத்துங்கோ" என்று  ஒரு குட்டைபிடித்த நாயைப் போல ஊளையிடத் தொடங்கினான்.  அடுத்த நொடியில் சொக்கி விழுந்த கிடந்த பெட்டைக் குயிலனின் திமிறும் கைகளை நிதானித்து மடக்கிப் பிடித்து பின்வளமாகப் பூட்டைப்போட்டுப் அழுத்தமாக இழுத்து நிமிர்த்தினான். பெட்டைக் குயிலனின் குழறலும் கத்தலும் இன்னும் அதிகமாகி ஒரு விசித்திரமான விலங்கொலியாக காதை அறைந்தது. சொக்கியின் அழுங்குப் பிடிக்குள் ஈரச்சாக்குக்குள் அகப்பட்ட எலி மாதிரி வெடவெடுத்து நடுங்கிக் கொண்டும், தன்னை விட்டுவிடும்படி கெஞ்சிக் கத்திக்கொண்டு நிற்கும் பெட்டைக் குயிலனைச் சுத்தி நான், கட்டையன், புக்கையர் மூவரும் நின்றோம்.

  போட்ட திட்டப்படி நான் பெட்டைக் குயிலனின் மூஞ்சையையும் நெஞ்சாங்கூட்டையையும்  நொருக்கத் தொடங்கியிருக்கவேண்டும்.  கட்டையன் அவன்ரை கவிட்டைக் கந்தலாக்கியிருக்கவேண்டும்.  ஆனால் குலைப்பன் காய்ச்சல் வந்தவன் மாதிரி உடம்பெல்லாம் உதறல் எடுத்துக்கொண்டு, எந்த எதிர்ப்பும் காட்டாமல் கெஞ்சி மண்டாடி அழுதுகொண்டிருந்தவனின் கண்களைப் பார்த்தபோது எனது நிலை தளர்ந்தது. குத்துவதற்கு உரப்பாக ஓங்கின கை அந்தரத்தில் உறைந்துபோய் பின்னர் அறுபட்டு உயிரற்ற சடம்போல் தளர்ந்து கீழே பதிந்தது.  நான் அடிக்காமல் நிற்பதைப் பார்த்த கட்டையனும், புக்கையரும் கூட செய்வதறியாது நின்றார்கள்.  செம்பகத்தின் அலகுக்குள் அகப்பட்டு உயிரைவிடப் போகும் மசுக்குட்டியைப் போல நெளிந்துகொண்டு, தன்னை விட்டுவிடும்படி இறைஞ்சிக்கொண்டிருக்கும் பெட்டைக் குயிலனைப் பார்த்து எனது மனம் இளகிச் சுருங்கிவிட்டதால் அவனுக்கு அடிக்க மனம் வரவில்லை.  சரிக்குச் சரி என்று யாரியாக சண்டைக்கு நிற்பவனுக்கு அடிக்கலாம். ஆனால் சரணாகதி அடைந்து ஒடுங்கி நிற்பவனுக்கு அடிப்பது எப்படி நீதியாகும் என்ற கேள்வி மனதைக் குடைந்தது.

 பெட்டைக் குயிலனை பூட்டுப்போட்டுப் பின்பக்கத்தால் அமத்திப் பிடித்துக்கொண்டிந்த சொக்கி, திட்டமெல்லாம் சறுக்குவதை உணர்ந்து, கதறும் பெட்டைக் குயிலனை இன்னும் இறுக்கி, முழங்காலால் அவனது காலிடுக்குக்குள் மிண்டித் தள்ளியவாறு "பேப் பூனாவளே! பனியங்கள் மாதிரி மிலாந்திக்கொண்டு நிக்காமல் ஆக்கள் வரமுந்தி அடியுங்கோடா.. இப்ப இவனைச் சும்மா விட்டால் நாளைக்கு எங்கள் எல்லாருக்குமெல்லே சேத்து வைச்சுக் கம்பியடிக்கப்போறான்" என்று ஆத்திரத்தோடு உறுமினான்.

 பெட்டைக் குயிலன் எதிர்ப்புக் காட்டாமல் கெஞ்சுவது ஒரு தற்காப்புக்கான தந்திரமாக இருக்கும் என்று மனதைச் சுதாகரித்துத் திடப்படுத்தி, அவன் காலமையில் குழவியனுக்கு செய்ததை நினைவுக்கு கொண்டுவந்து, தளம்பல் எதுவுமில்லாமல்  அவனை அடிப்பதற்கு என்னை மீளவும் தயார்படுத்த முயன்றேன். பெட்டைக் குயிலனின் அந்தப் பரிதாபமான பார்வையைச் சந்திக்கக் கூடாதென்று மனம் குறுகியது. அப்படிப் பார்த்தாலும் அவனது பார்வையை உள்வாங்காது எதிர்கொண்டு வெறித்துப் நோக்க வேண்டும்.  இது ஒரு பெரும் சவாலாகவே பட்டது. ஆரம்பத்தில் ஏராளமாக இருந்த மனோதிடம் சொல்லாமல் கொள்ளாமல் காலை வாரிவிட்டது. அடிக்கவேண்டும் என்ற வெறி துப்பரவாக வடிந்துவிட்டது. பலப் பரீட்டை விஷப் பரீட்சையாக மாறிக்கொண்டிருந்தது. சொக்கி "அடியுங்கோடா.. அடியுங்கோடா" என்று கத்தியபோதும் நான் அடிக்காமல் மீண்டும் பின்வாங்குவதைப் பார்த்த புக்கையரும் ஒன்றும் பேசாமல் நின்றான்.  வினாடிகள் ஓடிக்கொண்டிருந்தன.

 பனங்கூடலுக்கு அண்டிய வீடுகளில் மின்விளக்குகள் எரியத் தொடங்கின. ஆக்கள் வரப்போகின்றார்கள் என்று புரிந்தது. கட்டையன் என்ன நினைத்தானோ, ஏது நினைத்தானோ தெரியவில்லை. திடீரென்று சாரத்தின் மடிப்பைக் குலைத்து உள்ளேயிருந்த சேர்ட்டை எடுத்து தனது கண்கள் வெளியே தெரியாதவாறு தலையைச் சுற்றி இறுக்கிக் கட்டினான்.  தோட்ட வேலை செய்து உரமேறிப்போன கட்டையனது விம்மிப் புடைத்த நெஞ்சிலிருந்து குத்தீட்டிகளாக விசை கொண்ட கைகள்  வேகமாக வெளிக்கிளம்பி, சொக்கியின் பிடியிலிருந்த பெட்டைக் குயிலனை தாறுமாறாகத் தாக்கத் தொடங்கின.  அவனது இரண்டு கைகளும், கால்களும்  சுற்றிச் சுழன்று மிகுந்த நுட்பத்துடனும், லாகவமாகவும் இயங்கின.  ஓலமிட்டுக் கொண்டிருந்த பெட்டைக் குயிலனது உடம்பு கட்டையனது பயங்கரமான அடிகளாலும், உதைகளாலும் சின்னாபின்னப் பட்டுக்கொண்டிருந்தது.  கட்டையனுக்கேயுரிய கைவந்த வித்துவத்தை நான் கண்களை இமைக்காமலும் வாயைப் பிளந்தவாறும் பார்த்துக்கொண்டு நின்றேன்.

பெட்டைக் குயிலனது அலறல் உச்சத்தைத்  தொடவும், சத்தத்தைக் கேட்டு ஓடி வரும் ஆட்களின் காலடிச் சத்தம் கேட்கத் தொடங்கவும் நாங்கள் நாலு பேரும் பனைகளுக்கிடையே பிரிந்து முங்கியன் தோட்டத்தை நோக்கி ஓடத் தொடங்கினோம். மற்றையவர்களின் முகங்களில் வெற்றி முறுவல்கள் பூத்திருந்தபோதும், அடிபிடிக்கு உதவாத சொத்தையன் என்ற அவமானத்தில் நான் அமிழ்ந்துகொண்டிருந்தேன்.

- முற்றும் -

Comments

பிரசித்த பதிவுகள்